பின் தொடர்வோர்

Tuesday 4 December 2018

359.குருதிதோலினால்

359
பொது

         தனன தான தானான தனன தான தானான
          தனன தான தானான                             தனதான

குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
     குலைய ஏம னாலேவி                            விடுகாலன்
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
     கொடுமை நோய்கொ டேகோலி          யெதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
     பயமு றாமல் வேலேவு                       மிளையோனே
பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர
     பரிவி னோடு தாள்பாட                      அருள்தாராய்
மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
     மடுவி லானை தான்மூல                       மெனவோடி
வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
     வசன மோம றாகேசன்                           மருகோனே
கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி
     கடிய பேயி னோடாடி                         கருதார்வெங்
கனவில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
     கருணை மேரு வேதேவர்                        பெருமாளே

பதம் பிரித்து உரை

குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி
குலைய ஏமனால் ஏவி விடு காலன்

குருதி தோலினால் மேவு - இரத்தம், தோல் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட குடிலில் - குடிசையாகிய இவ்வுடலில் ஏதம்  ஆம் ஆவி - கேடு அடைகின்ற இந்த உயிர் குலைய - நிலை கெட்டு நீங்கும்படி ஏமனால் - எம தர்மனால் ஏவி விடு - அனுப்பப்பட்டு வருகின்ற காலன் - கூற்று
கொடிய பாசம் ஓர் சூல படையினோடு கூசாத
கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன்

கொடிய - கொடுமை வாய்ந்த பாசம் - பாசக் கயிறு ஓர் - ஒப்பற்ற சூலப் படையினோடு - சூலப் படை இவைகளோடு வந்து கூசாத - கூச்சமில்லாமல் கொடுமை நோய் கொடே - பொல்லாத துன்ப நோயைத் தந்து கோலி - வளைத்திருந்து எதிரா முன் - எதிர்ப்பதன் முன்பு

பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம் உறாமல் வேல் ஏவும் இளையோனே

பருதி - சூரியன் சோமன் - சந்திரன் வான் நாடர் - விண்ணுலகோர் படி உளோர்கள் - மண்ணுலகத்தினர் பால் ஆழி - திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட திருமால் (ஆகிய இவர்கள்) பயம் உறாமல் - பயம் நீங்கி
இன்புற வேண்டி வேல் ஏவும் இளையோனே - வேலைச் செலுத்திய இளையவனே

பழுது உறாத பா வாணர் எழுத ஒணாத தோள் வீர
பரிவினோடு தாள் பாட அருள் தாராய்

பழுது உறாத - குற்றம் சிறிதும் இல்லாத [பாக்களைப்  பாடும் திறமை வாய்ந்த] பா வாணர் - கவி மணிகளாலும் எழுத ஒணாத - எழுதுவதற்கு முடியாத (அழகை உடைய) தோள் வீர - தோள்களை உடையவனே பரிவினோடு - அன்புடன் தாள் பாட - நான் உன் திருவடியைப் பாடும்படியான அருள் தாராய் திருவருளைத் தந்தருள்க

மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி
மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி
மருது - மருத மரம் நீறு அதாய் வீழ - வேரற்று சிதறி விழும்படி வலி செய் –  தன் வலிமையைக் காட்டிய மாயன் - மாயவன் வேய் ஊதி - புல்லாங் குழலை வாசிப்பவன் மடுவில் - நீர் நிலையில் நின்ற ஆனை தான் - யானையானது மூலமே என ஓடி - ஆதி மூலமே என்று ஓலமிட்டு அழைக்க ஓடி

வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசனமோ மறா கேசன் மருகோனே

வரு - வந்த முராரி - திருமால் கோபாலர் - கோபாலன் மகளிர் கேள்வன் - இடை மகளிரின் கணவன் மாதாவின் வசனம் - தாயாகிய கைகேயியின் சொல்லை மறா கேசன் - மறுக்காமல் (காட்டுக்குச் சென்ற) கேசவனின் மருகோனே - மருமகனே
கருத ஒணாத ஞான ஆதி எருதில் ஏறு காபாலி
கடிய பேயினோடு ஆடி கருதார் வெம்

கருத ஒணாத - எண்ணுதற்கு அரிய ஞான ஆதி - ஞான மூர்த்தியும் எருது ஏறு - இடபத்தில் ஏறுபவரும் காபாலி - கபாலத்தைக் கையில் ஏந்தியவரும் கடிய - கடுமை வாய்ந்த பேயினோடு ஆடி - பேய்களுடன் ஆடுபவரும் கருதார் - தன்னை மறந்து (சிவ பூசையைக் கைவிட்ட திரிபுரத்தில் இருந்த அனைவரும்)

கனலில் மூழ்கவே நாடி புதல்வ காரண அதீத
கருணை மேருவே தேவர் பெருமாளே

வெம் கனலில் - கொடிய நெருப்பில் மூழ்கவே - முழுகும்படி நாடி - நாடியவரும் ஆகிய [சிவபெருமானுடைய] புதல்வ - மகனே காரண அதீத - காரணங்களுக்கு மேற்பட்டவனே கருணை மேருவே - கருணைப் பெருமலையே தேவர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே

சுருக்க உரை
இரத்தம், தோல் இவைகளால் ஆகிய குடிசையாகிய உடல், நிலை கெட்டு உயிர் நீங்கும்படி கூற்றுவன் பாசக் கயிறு, சூலாயுதம் இவற்றோடு வந்து, பொல்லாத நோய்களைத் தந்து, வளைந்து எழுந்து எதிர்ப்பதன் முன், விண்ணோர், மண்ணுலகோர், திருமால் ஆகியோர் பயம் நீங்கி இன்பம் உற, வேலாயுதத்தைச் செலுத்திய இளையோனே

பிழை இல்லாத பாக்களைப் பாடும் திறம் கொண்ட பாவாணர்களும் எழுத முடியாத அழகுடைய தோள்களை உடையவனே நான் அன்புடன் உனது திருவடியைப் பாடும்படியான அருளைத் தர வேண்டும் மருத மரத்தை வீழ்த்தியவனும், புல்லாங்குழலை ஊதுபவரும், தாயின் சொல்லை மறுக்காதவரும், மடுவில் யானை ஓலமிட கூடி அதனைக் காத்தவரும் ஆகிய திருமாலின் மருகனே,  பேய்களுடன் நடம் செய்வரும், கபாலம் ஏந்துபவரும், தன்னை மறந்த திரிபுரத்தில் இருந்தவர்களை நெருப்பில் முழுகும்படி செய்தவரும் ஆகிய சிவபெருமானின் மகனே, உன் தாள்களை நான் பாட அருள் செய்வாயாக

ஒப்புக
1 கருதார் வெம் கனலில் மூழ்கவே நாடி
அரிய திரிபுர மெரிய விழித்தவன்  - திருப்புகழ், குருவியெனப் பல,   வாழும் முப்புர(ம்) வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் - திருப்புகழ், தாரணிக்கு

2 ஏமனால் ஏவி விடு காலன்
தன்மராச தூத னைத்துகை பாதா நமோநம -
   திருப்புகழ் ஓதுமுத்தமிழ்

3மருது நீறதாய் வீழ
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருது இடை தவழ்ந்து நின்ற பரமபத நண்பர் அன்பின் மருகோனே
                                                     -திருப்புகழ் மருமலரினன்
4  மடுவில் ஆனை தான் மூல மென ஓடி
வெங்கை யானை வனத்திடை துங்க மா முதலைக்கு
வெருண்டு மூலம் எனக் கருடனில் ஏறி
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்குவி
தம்ப ராவ அடுப்பவன்  மருகோனே 
-                                                       திருப்புகழ், சங்குவார்முடி

  மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி
   மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி
      -      திருப்புகழ்,குருதிதோலினா

சுவடு பார்த்தட வருக ராத்தலை
தூளா மாறே தானா நாரா யணனே –
      -      திருப்புகழ், கவடு கோத்து





No comments:

Post a Comment