பின் தொடர்வோர்

Monday 24 December 2018

368.சுட்டதுபோ லாசை

368
பொது

                தத்ததனா தான தத்ததனா தான
                தத்ததனா தான         தனதான

சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
  துக்கமிலா ஞான                             சுகமேவிச்
சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
  சுத்தநிரா தார                               வெளிகாண
மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
  முட்டவுமீ தேறி                               மதிமீதாய்
முப்பதுமா றாறு முப்பதும்வே றான
  முத்திரையா மோன                   மடைவேனோ
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவே
  னப்பிரமா வோட                             வரைசாய
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
  எத்தனையோ கோடி                         யசுரேசர்
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு
  பத்திருதோள் வீர                        தினைகாவல்
பத்தினிதோள் தோயு முத்தமமா றாது
  பத்திசெய்வா னாடர்                     பெருமாளே

பதம் பிரித்து உரை

சுட்டது போல் ஆசை விட்டு உலக ஆசார
துக்கம் இலா ஞான சுகம் மேவி

சுட்டது போல் - (கையில் உள்ள ஒரு பொருள்) சுட்டதைப் போல ஆசை விட்டு - ஆசைகளை விட்டு ஒழித்து உலக ஆசார - உலக வாழ்க்கையால் ஏற்படும் துக்கம் இலா - துக்கங்கள் இல்லாத ஞான சுகம் மேவி - ஞான சுக நிலையை அடைந்து

சொல் கரண(ம்) அதீத நிற்குணம் ஊடாடும்
சுத்த நிராதார வெளி காண

சொல் - சொற்களுக்கும் கரண(ம்) - மனதுக்கும் அதீத - அப்பாற்பட்ட நிலையதாய் நிற் குணம் - குணம் கடந்த நிலையில் ஊடாடு - விளங்குகின்றதும் சுத்த - பரிசுத்தமானதும் நிராதார - சார்பற்றதுமான வெளி காண - பர வெளியைக் காண

மொட்டு அலர் வாரீச சக்ர சடாதார
முட்டவும் மீது ஏறி மதி மீதாய்

மொட்டு அலர் - மொட்டுக்கள் மலர்ந்துள்ள வாரீச சக்ர - தாமரைச் சக்கரங்களாகிய சடாதார - ஆறு ஆதாரங்கள் முட்டவும் மீது ஏறி - எல்லாவற்றின் மீதும் கடந்து சென்று மதி மீதாய் - மதிக் கலா அமிர்தம் பொங்கும் நிலைக்கு மேலானதும்

முப்பதும் ஆறு ஆறும் முப்பதும் வேறான
முத்திரையாம் மோனம் அடைவேனோ

முப்பதும், ஆறு ஆறும், முப்பதும் - (30 + 36 + 30) தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கும் வேறான - வேறானதான முத்திரையாம் - அடையாள அறி குறியான மோனம் அடைவேனோ - மோன நிலையை அடையும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா?

எட்ட ஒணா வேதனத்தோடு கோ கோ என
பிரமா ஓட வரை சாய

எட்ட ஒணா - இவ்வளவு என்று மனத்தால் அளதற்கரிய வேதனத்தோடு – சொல்லாள்வில்லாத வேதனையோடு கோகோ என - கோ கோ என்று அலறிக் கொண்டே பிரமா ஓட - பிரமன் ஓடவும் வரை - கிரௌஞ்ச மலை சாய - சாய்ந்து விழவும்

எற்றிய ஏழு ஆழி வற்றிட மாறு ஆய
எத்தனையோ கோடி அசுரேசர்

எற்றிய - (அலை) வீசுகின்ற ஏழு ஆழி - ஏழு கடல்களும் வற்றிட - வற்றிப் போக மாறாய - பகைவர்களான எத்தனையோ கோடி அசுரேசர் - கோடிக் கணக்கான அசுரத் தலைவர்கள்

பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு
பத்து இரு தோள் வீர தினை காவல்

பட்டு - அழிபட்டு ஒரு சூர் மாள - ஒப்பற்ற சூரன் இறக்கவும் விக்ரம - வலிமை பொருந்திய வேல் ஏவு - வேலாயுதத்தைச் செலுத்திய பத்து இரு தோள் வீர - பன்னிரு தோள் வீரனே தினை காவல் - தினைப் புனத்தைக் காவல் புரிந்த

பத்தினி தோள் தோயும் உத்தம மாறாது
பத்தி செய் வான் நாடர் பெருமாளே

பத்தினி தோள் தோயும் - கற்புடைய வள்ளியின் தோளை அணைந்த உத்தம - உத்தமனே மாறாது - மாறாத புத்தியுடன் பத்தி செய் - பத்தி செய்த வான் நாடர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே

சுருக்க உரை
கொதிக்கின்ற பொருளை எடுக்கும் போது தன்னையறியாமல் கை எங்ஙனம் கீழே விட்டுவிடுவோமோ, அது போல், ஆசைகளை சட்டென்று விட்டொழித்து, உலக வாழ்க்கையால் ஏற்படும் துக்கங்கள் இல்லாத ஞான சுக நிலையை அடைந்து, சொல்லுக்கும், மனதுக்கும் எட்டாததும், குணங்களைக் கடந்ததும், பரிசுத்தமானதும், சார்பற்றதுமாகிய பர வெளியைக் காண, தாமரைச் சக்கரங்களாகிய ஆறு ஆதாரங்களைக் கடந்து சென்று, மதிக் கலா அமிர்தம் பொங்கும் நிலைக்கு மேலானதும், 96 தத்துவங்களுக்கும் வேறானதுமான அடையள அறிகுறியான மவுன நிலையை அடையும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா?

மிக்க மன வேதனையோடு பிரமன் ஓடவும், கிரௌஞ்ச மலை சாய்ந்து விழவும், ஏழு கடல்களும் வற்றிப் போகவும், கணக்கில்லாத அசுரத் தலைவர்கள் இறந்து படவும் வேலைச் செலுத்திய பன்னிருதோள் வீரனே, தினைப் புனத்தைக் காவல் புரிந்த கற்புடைய வள்ளியை அணைந்தவனே, நிலையான புத்தியுடன் பத்தி செய்த தேவர்கள் பெருமாளே நான் மோன நிலையை அடைவேனோ?

விளக்கக் குறிப்புகள்

சுட்டது போல் ஆசை விட்டுயிர்     
அற்றது பற்றெனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே -திருவாய் மொழி
அவா இல்லார்க் கில்லாகும் துன்பம் - திருக்குறள் 
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினனும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே - திருமந்திரம்
ஆ முப்பதும் ஆறும்ஆறும் முப்பதும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சம்    அறு நாலும் 
ஆறு மாய சஞ்சல ங்கள் வேறதாவிளங்குகின்ற -
திருப்புகழ் ,ஆறுமாறுமஞ்சு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறைய மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு         சம்ப்ரதாயம்  - திருப்புகழ்     அதலவிதல
ஆறாறையும் நீத்ததன் மேனிலையைப் பேறா அடியேன் பெறுமாறுளதோ - கந்தர்  அனுபூதி

சடாதார முட்டவும் மீதேறி
உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் (நிலைகள்) - குதம் (மூலாதாரம்), குய்யம் (ஸ்வாதிஷ்ட்டானம்), நாபி (மணிபூரகம்), இதயம் (அநாகதம்), அடிநா (விஷுத்தி), நெற்றி (ஆக்ஞா)
நாம் உட்கொள்ளும் சுவாசக் காற்று, இந்த ஆறு நிலைகளுக்குள் பரவி, முறைப்பட செயல் படுவதையும், இறை வழிபாட்டுக்கும் இந்த நிலைகளுக்கும் உள்ள தொடர்புகளையும் சைவ சித்தாந்த நூல்களில் காணலாம்
ஆர மூணுபதி  யிற்கொள நிறுத்திவெளி
யாரு சோதி – திருப்புகழ்,  ஆசைநாலுசது
பிரமா ஓட
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
கன்றச் சிறையிடு மயில்வீரா- திருப்புகழ், வஞ்சத்துடன்




No comments:

Post a Comment