பின் தொடர்வோர்

Thursday 6 December 2018

364.சலமல

364
பொது
தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த
தனதன தனத்த தத்த                    தனதான


சலமல மசுத்த மிக்க தசைகுருதி யத்தி மொய்த்த
  தடியுடல் தனக்கு ளுற்று                             மிகுமாயம்
சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
  தனிலுரு மிகுத்து மக்க                             ளொடுதாரம்
கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
  கருவழி யவத்தி லுற்று                              மகிழ்வாகிக்
கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்ற
  கடுவினை தனக்குள் நிற்ப                     தொழியாதோ
மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
  மழுவனல் கரத்துள் வைத்து                       மருவார்கள்
மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து
  மறைதொழ நகைத்த அத்தர்                   பெருவாழ்வே
பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
  படையது பொருப்பில் விட்ட                   முருகோனே
பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
  பலருய அருட்கண் வைத்த                        பெருமாளே
        

பதம் பிரித்து உரை

சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த
தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம்
சலம் மலம் அசுத்தம் மிக்க - சலம், மலம், அழுக்குகள் நிறைந்த தசை குருதி அத்தி மொய்த்த - ஊன், இரத்தம், எலும்பு, இவை நெருங்கிச் சூழ்ந்துள்ள தடி உடல் தனக்குள் உற்று - புலாலால் ஆய இந்த உடலில் வந்து வாசம் செய்து மிகு மாயம் - மிகவும் மோசமான செயல்கள்

சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தடக்கை அத்தி
தனில் உரு மிகுத்து மக்களொடு தாரம்
சகலமும் இயற்றி - பலவற்றையும் செய்து மத்த மிகு - மதம் மிகுந்ததும் இரு - பெரிய தடம் கை - துதிக்கையை உடையதுமான அத்தி தனில் - யானை போல உரு மிகுத்து - உருவம் பெருத்து மக்களொடு தாரம் - குழந்தைகளோடு மனைவி

கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி
கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி
கலன் - ஆபரணங்கள் அணி துகில்கள் - உடுக்கும் ஆடைகள் கற்பினொடு - கல்வி இவைகளோடு குலம் அனைத்தும் - உயர்ந்த குலம் ஆகியவை முற்றி - முழு வளர்ச்சி பெற்று கரு வழி அவத்தில் - பிறப்பு வழி என்கின்ற பயனற்ற வழியில் உற்று - செல்பவனாக மகிழ்வாகி - உள்ளம் மகிழ்ந்து

கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தம் உற்ற
கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ
கலை பல பிடித்து - பல வித சாத்திர நூல்களைக் கற்று நித்தம் - நாள் தோறும் அலை படும் - அலைச்சல் உறும் அநர்த்தம் உற்ற - வேதனை நிறைய கடு வினை தனக்குள் - பொல்லாத வினைக்கு உள்ளாகி நிற்பது ஒழியாதோ - நிற்கும் இச்செயல் நீங்காதோ?

மலை மகள் இடத்து வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து
மழு அனல் கரத்துள் வைத்து மருவார்கள்
மலை மகள் - இமவான் மகளாகிய பார்வதியை இடத்து வைத்து - இடது பாகத்தில் வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து - சந்திரனையும் கங்கையையும் சடையில் வைத்து மழு அனல் கரத்துள் வைத்து - மழுவாயுதத்தையும் நெருப்பையும் கையிலே ஏந்தி – தாங்கி மருவார்கள் - படைவர்களாகிய திரிபுரத்து அரசர்கள்

மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இடக்கை வைத்து
மறை தொழ நகைத்த அத்தர் பெரு வாழ்வே
மடிவுற நினைத்து - இறந்து ஒழிய நினைத்து வெற்பை - மேரு மலையை வரி சிலை இடக் கை வைத்து - கட்டப்பட்ட [வில்லாக] இடது கையிலே வைத்து மறை தொழ - வேதங்கள் தொழுது நிற்க நகைத்த - சிரித்து எரித்த  அத்தர் பெருவாழ்வே - பெருமானாகிய சிவபெருமானின் பெருஞ் செல்வமே

பல திசை நடுங்கம் உற்று நிலை கெட அடல் கை உற்ற
படை அது பொருப்பில் விட்ட முருகோனே
பல திசை நடுக்கம் உற்று - பல திசைகளில் உள்ளவர்களும் நடுக்கம் அடைந்து நிலை கெட - நிலை தடுமாறி அடல் கை - வெற்றி பொருந்திய கையில் உற்ற படையது - இருந்த படையாகிய வேலாயுதத்தை பொருப்பில் விட்ட முருகோனே - கிரௌஞ்ச மலையின் மீது செலுத்திய முருகோனே

பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர்
பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே
பழுது அறு - குற்றமற்ற தவத்தில் உற்று - தவ நிலையில் இருந்து வழி மொழி - வழி பாட்டு மொழிகளை உரைத்த பத்தர் - சொல்லுகின்ற பக்தர்கள் பலர் - பலரும் உய - நற் கதி பெற அருள் கண் வைத்த - அருட் பார்வை வைத்த பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

சலம், மலம், அழுக்கு, மாமிசம், ரத்தம், எலும்பு இவைகள் சூழ்ந்துள்ள உடலில் வாசம் கொண்டு, மிக வஞ்சகமான செயல்களைச் செய்து, உடல் பெருத்து, குழந்தை, மனைவி, ஆடை ஆபரணங்கள், உயர் குலம், கல்வி ஆகிவைகளில்மூழ்கி, பயனற்ற வழியில் செல்பவனாக மகிழ்ச்சி அடைந்து, சாத்திர நூல்களைக் கற்று, அலைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகும் நிலைநீங்காதோ?
உமையை இடப் பக்கத்தில் வைத்து, சந்திரனையும் கங்கையையும் சடையில்வைத்து, மழுவையும் அனலையும் கரத்தில் ஏந்தி, திரி புர அசுரர்களைச் சிரித்து எரித்து, வேதங்கள் தொழுது நின்ற சிவபெருமானின் செல்வமே, பலதிசைகளில் உள்ளவர்கள் நடுங்கவும், வெற்றி பொருந்திய வேலாயுதத்தைக்கிரௌஞ்ச மலை மீது செலுத்தியவனே, தவ நிலையில் நின்று வழி பாட்டுமுறைகளை உரைத்த பக்தர்கள் உய்யும் பொருட்டு அவர்கள் மீது அருள்பார்வை செலுத்திய பெருமாளே, பிறவியாகிய கடு வினை என்னுள் நிற்பது ஒழியாதோ?

விளக்கக் குறிப்புகள்

நகைத்த அத்தர்
அரிய திரிப்புர மெரிய விழித்தவன் – திருப்புகழ், குருவியென

மலை மகள் இடத்து வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து
மழு அனல் கரத்துள் வைத்து மருவார்கள்
மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இடக்கை வைத்து
மறை தொழ நகைத்த அத்தர் பெரு வாழ்வே – மனதில் இருத்த வேண்டிய பிரார்த்தனை

நகைத்த அத்தர் பெரு வாழ்வே – திரிபுரம் எரித்த வரலாறு.
சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பட்டியலிடுகிற போதெல்லாம் அதில் கண்டிப்பாக இடம்பெறும் ஒரு விஷயம், அவர் திரிபுரங்களை [முப்புரம்] எரித்தது!
``தாரகாட்சன், கமலாட்சன், வித்தியுன்மாலி` என்னும் மூவர் அசுரர்கள். அவர்கள் மயன் வகுத்த `பொன், வெள்ளி, இரும்பு` இவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் நினைத்த இடத்தில் பறந்து சென்று இறங்கும் சித்தியை அடைந்து, அதனால் உலகிற்கு இடர் விளைத்து கொண்டிருந்தனர். அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டு, அவ்வசுரர்களை அழித்தருள வேண்டினர். சிவபெருமான் அதற்கு இசைவுதரப் பூமியைத் தேர்த்தட்டாக அமைத்துத் தேவர் பலரும் தேரின் பல பாகங்களாயினர். வேதங்கள் நான்கும் குதிரைகளாக, அவற்றை ஓதும் பிரமன் தேரை ஓட்டும் சாரதியானார். திருமால் அம்பாக, வாயுதேவன் அம்பின் சிறகுகளும், அக்கினி தேவன் அம்பின் அலகும் ஆயினர். சிவபெருமான் வாசுகியை நாணாகக் கொண்டு மகாமேரு மலையை வில்லாக வளைத்துத் திருமால் முதலியோரால் அமைந்த அம்பைப் பூட்டித் திரிபுரங்களை நோக்கியபொழுது, அவரிடத்து உண்டாகிய கோபச் சிரிப்பால் முப்புரங்களும் வெந்து நீறாயின. பூட்டிய அம்பினை எய்யாமலே திரிபுரத்தைச் சிரித்து அழித்ததால் அவர் யாதொரு செயலையும் கருவியாலன்றி நினைவு மாத்திரத்தாலே செய்யும் பாராக்கரமகாரர் என புலப்படுத்தப்படுகிறது.  
அரிய திரிபுர மெரிய விழித்தவன்- திருப்புகழ், குருவியெனப் பல, வாழும் முப்புர(ம்) வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் - திருப்புகழ், தாரணிக்கு
சிவபெருமான் சிரித்து எரித்தது இருள், இருவினை, மாயை (ஆணவம், கன்மம், மாயை) என்கின்ற மூன்று மலங்கள். அவையே மும்மதில்கள் என உருவகிக்கப்பட்டன்.
இருள் (ஆணவம்) கடினம் ஆனது; இரும்பு என உருவகிக்கப்பட்டது.  இருவினை (கன்மம்) என்பதில் நல்வினை சில சுகங்கள் கொடுப்பதால் வெள்ளி என விரும்பும் உலோகமாக உருவகிக்கப்பட்டது. மாயை என்பது மலமானாலும் உயிர்க்கு சிறிது சிறிதாக அறிவொளி ஊட்டும் கருவிக்கு அடிப்படையானதால் அது தங்கம் எனப்பட்டது.
இவை மூன்றும் உயிரைச்சூழ்ந்து நிற்பதால் இவை மதில்கள் எனப்பட்டன. இவை மூன்றில் கன்மமும், மாயையும் சென்று சென்று மீண்டும் பற்றி உயிருக்கு உடல் அமைவதால் இவை பறக்கும் மதில்கள் எனப்பட்டன. ஆணவம் வலிதாக இருண்டதாக இரும்பாக இருந்தாலும் இறுதியில் முத்தியில் வலி மடங்கிப் போவதால் அதுவும் பறக்கும் மதிலாயிற்று.
இதை சிவபெருமான் சிரித்தே எரித்தான் என்றது இறைவன் இம்மூன்றை நீக்குவதை அவ்வளவு எளிதாகச் செய்தான் என்பதைக் குறிக்கிறது என்பர்


No comments:

Post a Comment