பின் தொடர்வோர்

Sunday 16 December 2018

367.சீதமலம்

367
பொது

             தானதன தத்த தானதன தத்த
             தானதன தத்த              தனதான

சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
  மானபிணி சுற்றி                         யுடலூடே
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
  தீதுவிளை விக்க                        வருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
  சாகரம தற்கு                            ளழியாமுன்
தாரணித னக்கு ளாரணமு ரைத்த
  தாள்தரநி னைத்து                    வரவேணும்
மாதர்மய லுற்று வாடவடி வுற்று
  மாமயிலில் நித்தம்                    வருவோனே
மாலுமய னொப்பி லாதபடி பற்றி
    மாலுழலு மற்ற                  மறையோர்முன்
வேதமொழி வித்தை யோதியறி வித்த
  நாதவிறல் மிக்க                      இகல்வேலா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
  மீளவிடு வித்த                         பெருமாளே

பதம் பிரித்து உரை


சீத மலம் வெப்பு வாதம் மிகு பித்தம்
ஆன பிணி சுற்றி உடலூடே
சீத மலம் - சீதபேதி வெப்பு - சுரம் வாதம் - வாயு மிகு பித்தம் - மிக்கு வரும் பித்தம் ஆன பிணி - ஆகிய நோய்கள் சுற்ற - சூழ்ந்துள்ள உடலூடே - உடலினுள்

சேரும் உயிர் தப்பி ஏகும் வ(ண்)ணம் மிக்க
தீது விளைவிக்க வரு போதில்
சேரும் உயிர் தப்பி - சேர்ந்துள்ள உயிர் நழுவி ஏகும் வ(ண்)ணம் - போகும்படி மிக்க - அதிக தீது விளைவிக்க - தீமை உண்டாகும்படி வரு போதில் - வருகின்ற சமயத்தில்

தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம் அதற்குள் அழியா முன்
தாதையொடு - தந்தையும் மக்கள் - மக்களும் நீதியொடு - இயல்பாகவே துக்க சாகரம் அதற்குள் - துக்கக் கடலில் அழியா முன் - வேதனைப்பட்டு அழிந்து போவதற்கு முன்

தாரணி தனக்குள் ஆரணம் உரைத்த
தாள் தர நினைத்து வரவேணும்
தாரணி தனக்குள் - இப் பூமியில் ஆரணம் உரைத்த - வேதங்கள் போற்றுகின்ற தாள் தர - திருவடியை (அடியேனுக்குத்) தர நினைத்து வரவேணும் - நீ நினைவுற்று வந்தருள வேண்டும்

மாதர் மயல் உற்று வாட வடிவுற்று
மா மயிலில் நித்தம் வருவோனே
மாதர் - (சீவாத்மாக்கள் ஆகிய) மாதர்கள் மயல் உற்று - (பரமாத்மாவாகிய) உன் மேல் காதலுற்று வாட - வாடினால் வடிவுற்று - திருவுருவ காட்சி தந்து மா - அழகிய மயிலில் - மயிலின் மேல் நித்தம் வருவோனே - நாள் தோறும் வருபவனே

மாலும் அயன் ஒப்பிலாதபடி பற்றி
மால் உழலும் மற்ற மறையோர் முன்
மாலும் - திருமாலும் அயன் - பிரமனும் ஒப்பில்லாதபடி - ஒப்பில்லாதபடி (உயர்ந்த தவ நிலையில்) பற்றி - (உன் மீது) அன்பு வைத்து (நிற்க) மால் உழலும் - மயங்கி திரியும் மற்ற மறையோர் முன் - மற்ற வேதத்தில் வல்லவர்களுக்கு

வேத மொழி வித்தை ஓதி அறிவித்த
நாத விறல் மிக்க இகல் வேலா
வேத மொழி வித்தை - வேத வார்த்தைகளின் உண்மைப் பொருளை ஓதி அறிவித்த - ஓதிக் கற்பித்த நாத - தலைவனே விறல் மிக்க - வீரம் மிக்க இகல் வேலா - வலிமை வாய்ந்த வேலனே

மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி
மீள விடுவித்த பெருமாளே
மேல் அசுரர் விட்ட - முன்பு அசுரர்கள் காவலில் இட்ட தேவர் சிறை வெட்டி - தேவர்களின் சிறையை நீக்கி மீள விடுவித்த - (அவர்களை) மீள்வித்து விடுவித்த [மீண்டும் தேவர் உலகுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த] பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

சீதபேதி, சுரம், வாதம், பித்தம் ஆகிய நோய்கள் சூழ்ந்துள்ள உடலினுள் சேர்ந்துள்ள உயிர் நழுவி, தந்தை, மக்கள் ஆகியோர் துக்கக் கடலில் வேதனைப்பட்டு அழிவதற்குமுன், இப்பூமியில் வேதங்கள் போற்றும் உன் திருவடியைத் தர நினைவு கொண்டு வந்து அருள வேண்டும்.

ஜீவாத்மாக்களாகிய மாதர்கள் பரமாத்மா வாகிய உன்னைப் பற்ற விரும்பி வாடினால், அவர்களுக்குத் திருவுருவக் காட்சியைத் தந்து மயிலின் மீது நாள் தோறும் வருபவனே, திருமாலும், பிரமனும் நிகரில்லாத உயர்ந்த நிலையில் உன்னைப் பற்றி நிற்கவும், அவர்களுக்கு வேதத்தை உபதேசித்தவனே, மற்ற மறையோர்களும் அங்ஙனமே விரும்ப, அவர்களுக்கும் வேதத்தின் உண்மைப் பொருளை ஓதிக் கற்பித்த வேலனே, அசுரர்கள் வைத்த சிறையினின்று தேவர்களை விடுவித்த பெருமாளே, உன் திருவடியைத் தந்து அருள வேண்டும்

No comments:

Post a Comment